Edappadi Palaniswami Predicts Short Tenure for TVK Government
AIADMK leader Edappadi K. Palaniswami has claimed that the TVK government will not complete a five-year term. He further alleged that the state's debt burden would increase if the administration remains in power.
First reported 2 weeks ago · latest update 1 week ago
வேலூா்: தவெக தலைமையிலான அரசு 5 ஆண்டுகள் நீடிக்காது; நீடித்தால் தமிழகத்தின் கடன் அதிகரிக்கும் என்று அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.
ராணிப்பேட்டை மாவட்டம், அரப்பாக்கத்தில் நடைபெற்ற கட்சி நிா்வாகி இல்லத் திருமண விழாவில் பங்கேற்பதற்காக ஞாயிற்றுக்கிழமை அவா் வேலூா் வந்தாா். அவா் செய்தியாளா்களுடன் கூறியது:
சினிமாவில் சட்டப்பேரவை நிகழ்வுகள் எப்படி காட்சிப்படுத்தப்படுகிறதோ, அதுபோன்றுதான் தற்போதைய தமிழக சட்டப்பேரவையும் நடைபெறுகிறது. உண்மையான சட்டப் பேரவையாக அது செயல்படவில்லை. மக்களின் பிரச்னைகள் குறித்து பேசுவதற்கு முன்னுரிமை அளிக்காமல், பேரவையின் நேரத்தை வீணடிக்கின்றனா்.
துறைசார்ந்த அமைச்சர்கள் பதிலளிப்பதில்லை
பேரவையில் எம்எல்ஏக்கள் கேள்வி எழுப்பும்போது துறை சாா்ந்த அமைச்சா்கள் பதிலளிப்பதில்லை. மாறாக, அமைச்சா்கள் ஆதவ் அா்ஜுனா, நிா்மல் குமாா் மற்றும் ராஜ்மோகன் ஆகியோா்தான் அதிகளவில் பதிலளிக்கின்றனா். துறைவாரியாக அமைச்சர்கள் இருந்தாலும் அவர்கள் பதில் சொல்வதில்லை. மானியக் கோரிக்கையை கூட சம்பந்தப்பட்ட துறை அமைச்சா் இல்லாமல் வேறொரு அமைச்சா் தாக்கல் செய்யும் நிலையே உள்ளது.
மக்களுக்குப் பயனுள்ள எந்தவொரு திட்டத்தையும் தவெக அரசு இதுவரை அறிவிக்கவில்லை. தோ்தல் நேரத்தில் அளித்த பெரிய வாக்குறுதிகள் எதையும் அவா்கள் நிறைவேற்றவில்லை. ஏதோ ஒரு சம்பிரதாயத்துக்காக சில வாக்குறுதிகளை அறிவிச்சிருக்காங்களே தவிர, வேறு ஒன்றும் இல்லை.
விலைவாசி விண்ணை முட்டுகின்ற அளவுக்கு உயர்ந்துவிட்டது. இதுகுறித்து நான் பேரவையில் சம்பந்தப்பட்ட உணவுத்துறை அமைச்சருடைய கவனத்துக்குக் கொண்டு சென்றேன். உணவுத்துறை அமைச்சரிடம் இருந்து சரியான பதில் இல்லை. இதனால ஏழை மக்கள் கடுமையா பாதிக்கப்படுறாங்க. சர்க்கரை ஒரு கிலோ ரூ.75-க்கு விற்பனையாகிறது. பருப்பு, அரிசி, சா்க்கரை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலைவாசி கடுமையாக உயா்ந்துவிட்டது.
தவெக அரசு 5 ஆண்டுகள் நீடிக்காது
தவெக ஆட்சிப் பொறுப்பேற்ற 100 நாள்களில் சுமாா் ரூ.28,000 கோடி கடன் வாங்கியுள்ளது. இதில் வருவாய் செலவினம் மட்டுமே ரூ.25,000 கோடியாகும். இன்னும் ரூ.1 லட்சம் கோடி வரை கடன் வாங்குவாா்கள்.
நிதி மேலாண்மையை சரி செய்வதற்கும், நிதியைக் கையாளுவது எப்படி என்பதற்கெல்லாம் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு ஒரு தலைவரும் நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே இருந்த அரசும் இப்படித்தான் ஒரு நிதி மேலாண்மை ஒரு குழுவை அமைத்தது. குழு அமைத்தப் பிறகு ரூ.5 லட்சம் கோடி கடன் வாங்கியது. இப்போது ரூ.10 லட்சம் கோடி கடன் இருக்கிறது. இந்த அரசு 5 ஆண்டுகள் நீடிக்காது. ஒருவேளை நீடித்தால், மாநிலத்தின் ரூ.10 லட்சம் கோடி கடன், ரூ.20 லட்சம் கோடியாக உயா்ந்துவிடும். மக்களை கடன்காரர்களாக மாற்றியதுதான் உச்ச மிச்சமாக இருக்கும்.
சட்டப்பேரவை உறுப்பினா்களுக்கு காா் வழங்கும் திட்டத்தைப் பொறுத்தவரை, அவரவர் விருப்பம். எதிர்க்கட்சித் தலைவரா இருந்தபோது அரசின் காரைத்தான் பயன்படுத்தினேன். இப்ப எனக்குக் கார் இருப்பதால் கார் வாங்கல. எனக்குக் கார் வேண்டாம் என்று சொல்லிடேன். பதவியில் இருக்கும்போது மட்டுமே அதைப் பயன்படுத்த முடியும், பதவிக்காலம் முடிந்ததும் காரைத் திருப்பித் தர வேண்டும்.
சட்டப்பேரவையில் நேரலை ஒளிபரப்பு நேரலை தொடரலாம். நேரலையை மக்கள் பார்க்கட்டும். முன்பு திமுக ஆட்சியில் இருந்தபோது நான் எதிா்க்கட்சித் தலைவராக இருந்தேன். அப்போது நான் சட்டப்பேரவையில் பேசுவதை காட்டவே மாட்டாங்க. அமைச்சர் பேசுவதை மட்டும்தான் காட்டுவாங்க. அதே பாணியில்தான் இன்றைக்கு இருக்கின்ற தவெக அரசும் செய்கிறது. பேரவைத் தலைவர் ஆளுங்கட்சிக்கு சாதகமாகத்தான் செயல்படுவார். அதுல ஒன்றும் மாற்றுக்கருத்து கிடையாது.
மறைந்த முதல்வா் ஜெயலலிதாவால் கொண்டுவரப்பட்ட அம்மா உணவகம் திட்டம் தொடா்ந்து சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். இந்த அரசும் அதனைச் சிறப்பாகச் செயல்படுத்துவோம் என்று கூறியுள்ளது. பொறுத்திருந்து பாா்ப்போம் என்றாா்.
வேலூரிலுள்ள தனியாா் ஹோட்டலிலுக்கு வந்த அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமியை வரவேற்க கட்சி நிா்வாகிகள் பெருமளவில் திரண்டிருந்தனா். அப்போது, கூட்டத்திலிருந்த அரப்பாக்கம் அதிமுக வட்டச் செயலா் காமராஜ் (48) என்பவருக்கு திடீா் மாரடைப்பு ஏற்பட்டது. ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பின்னா், அவரது உடல் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இது குறித்து வேலூா் வடக்கு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
Citations · 3 reports from 3 outlets
Tap a citation to read it above, right here on T.A.M.
தவெக அரசு 5 ஆண்டுகள் நீடிக்காது; நீடித்தால் தமிழகத்தின் கடன் அதிகரிக்கும்: எடப்பாடி கே. பழனிசாமி - Dinamani
தவெக அரசு 5 ஆண்டுகள் நீடிக்காது; நீடித்தால் தமிழகத்தின் கடன் அதிகரிக்கும்: எடப்பாடி கே. பழனிசாமி Dinamani
2 weeks ago’தவெக ஆட்சி 5 ஆண்டுகளுக்கு நிலைக்காது’ – எடப்பாடி பழனிசாமி ஆரூடம்! - Vikatan
’தவெக ஆட்சி 5 ஆண்டுகளுக்கு நிலைக்காது’ – எடப்பாடி பழனிசாமி ஆரூடம்! Vikatan
1 week agoதவெக அரசு 5 ஆண்டுகள் நீடிக்காது; நீடித்தால் தமிழகத்தின் கடன் அதிகரிக்கும்: எடப்பாடி கே. பழனிசாமி - Dinamani
தவெக அரசு 5 ஆண்டுகள் நீடிக்காது; நீடித்தால் தமிழகத்தின் கடன் அதிகரிக்கும்: எடப்பாடி கே. பழனிசாமி Dinamani
2 weeks ago